தை மகளே வருக! – பொங்கல் விழா – 2020
தை மகளே வருக! – பொங்கல் விழா – 2020
தை மகளுக்கு வணக்கம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பழமைதனைப் பறைசாற்றிப் பருதிவொளி யாய்நீண்டு,
விழுதுகளாய் வேரூன்றி வினையழிக்கும் சூல்கொண்டு,
குழுவினராய் ஒன்றாகி, குலங்காக்கும் கற்கண்டு
உழவர்களைக் காப்பாற்றும் உறுதிதனை உட்கொள்வோம் !
எழுதாத கவிதைகளாய் ஏருழுது நிலம்காக்க
பொழுதெல்லாம் கண்விழிக்கும் புண்ணியரின் உயிர்காக்க,
புழுதிக்கால் கைகளுக்கு பொன்னாலே அலங்கரிக்க,
பழுதற்ற மனத்தாலே பகிர்ந்திடுவோம் உறுதிமொழி !
அழுகின்ற அவர்கண்கள் ஆனந்தம் பார்த்திடவே
விழுகின்ற வியர்வையிலே வைரங்கள் முளைத்திடவே
உழுதுண்டு வாழ்வதுவே உயர்வென்று காட்டிடவே
எழுந்திட்டோம் இனியென்ன என்றென்றும் நற்பொழுதே !
– eluthu.com
ஆடியில் விதை விதைத்து, அதை ஆறு மாதம் கழித்து அறுவடை செய்யும் உழவர்கள், தை முதல் தேதியில் உழவுக்கு உதவியாய் இருந்த இயற்கைக்கு நன்றி சொல்கிறார்கள். இதை ஒட்டி உருவானதே, ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்கிற பழமொழி.
உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.
உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கை சக்திகளுக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த ஆநிரைகளுக்கும் தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா இப்பொங்கல் விழா.
இத்தை திருநாளை போற்றும் விதமாக நமது பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி முத்தமிழ் மன்றம் சார்பாக நம் கல்லூரி விவசாய திடலில் 8 ஜனவரி 2020 அன்று பொங்கல் விழா உற்சாகத்துடனும் மண்ணின் மணத்துடனும் கொண்டாடப்பட்டது.
விழாவை தலைமை தாங்கும் பொருட்டு பண்ணாரி அம்மன் குழுமத் தலைவர் திரு. எஸ். வி. பாலசுப்பிரமணியம் அவர்கள் வாத்தியம், நாதஸ்வரம் முழங்க முளைப்பாரி ஊர்வலத்துடன் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளான மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம் என பாரம்பரிய முறையில் மண்ணுக்கு உரிய கலாச்சாரத்துடன் சிறப்பாக வரவேற்கப்பட்டார்.
தமிழ் முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டு, ஆண்டு முழுவதும் தங்களுக்காக உழைத்த ஆநிரைகளுக்கு நன்றி தெரிவித்து அவற்றிற்கு பூஜை நடத்தப்பட்டது.
விழாவில் நம் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் விதமாக பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகளாகிய சிலம்பம், உரி அடித்தல், கபடி, கயிறு இழுத்தல், வழுக்கு மரம், கும்மி, கோலப்போட்டி, பாரம்பரிய இயல், இசை, நாடகம், நடனம், நாட்டுப்புற கலைகள் ஆகிய நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விழாவில் புது அரிசி, பருப்பு, வெல்லம், பால், நெய் ஆகியவை பயன்படுத்தி பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
இறுதியாக மாணவர்களின் ஆரவார கலை நிகழ்ச்சிகளுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.
பொங்கட்டும் தைப்பொங்கல்
நிலைக்கட்டும் இன்ப பொங்கல்
வளம் தரும் தையை
வலம் வரும் பரிதியை
இருகரம் நீட்டி வரவேற்போம்
இல்லாமை போக்க கைகொடுப்போம்
உழவன் வாழ வழி செய்வோம்
உழவு செழிக்க வகை புரிவோம்
காளை அடக்கும் காளையர்
கடைக்கண்ணோடு நோக்கும் பாவையர்
உறவோடு கை கோர்த்து
அன்போடு நாளும் இணைந்து
புதுப்பானை நிறையட்டும்
புதுமைப் பொங்கல் பொங்கட்டும் !
அனைவர்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
-eluthu.com
Also Read,
Is nuclear energy renewable or non-renewable source? Part-1